சோழவந்தான் அரசஞ் சண்முகனார்

thiruvalluvar

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார்.

மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது. இவர் சைவவேளாளர் குலத்தில் பிறந்தவர். இவர் இளமையிலே ஆர்வத்தோடு கல்வி கற்றுப் பெரும் புலமை பெற்றுவிட்டார். தம் காலத்தில் பலர் போற்ற வாழ்ந்த பெரும் புலவராக விளங்கினார். ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என காரணத்தைக் காட்டி ஆங்கிலப் பாடத்துக்கு பாடநேரத்தைக் கூட்டியும் தமிழ்ப் பாட நேரத்தைக் குறைத்தும் தலைமை ஆசிரியர் ஆணைக் கொண்டுவந்தபோது அதனை எதிர்த்துப் பள்ளியிலிருந்து வெளியேறினார். மதுரை சேதுபதிப் பள்ளியில் பாரதியார் தமிழாசிரியராக வேலையில் சேருவதற்காக தாம் விடுப்புப் போட்டு அவர் இடத்தில் பாரதியார் பணிசெய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.


இவர் கலந்துகொண்ட புலமைப் போர்கள் பல. அவற்றுள் ‘உம்மை’யைப் பற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியும், மறுப்பும் குறிப்பிடத் தக்கவை. ‘உம்மை’ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வென்ற சண்முகனார் முடிவில், “இதுகாறும் உம்மை நிலை அறியாதிருந்த நீவீர் இனியேனும் உம்மை நிலை அறிவீராக” என்று இரு பொருள்பட எழுதினார்.

எனினும், இவரோடு யாழ்ப்பாண தமிழறிஞர் சி. கணேசையர் நடத்திய விவாதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும், அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவினார்.

Other Articles